Tuesday, April 21, 2015

முக்கூடற் பள்ளு....


தன தன தனத் தானன தானன--
      தானத் தனனா.

மணி மரகதச் சோதியர் ஆதியர்
மனு மரபினிற் காவலர் கோவலர்
மறை முதல்வர்முக் கூடலர் ஏடலர்
      --வாசத் துளவோர்
அணி அரவணைத் தூயவர் மாயவர்
அடி யர்வமனப் பூரணர் காரணர்
அழ கர்பள்ளிசைப் பாவளம் நாவளம்
      --ஆகத் தருவோர்
துணி வொடுதிருத் தாள்வலி தோள்வலி
துணை யனமுதற் கூறிய தேறிய
சுரர் பதிபகைக் கீறுள வீறுள
      --சூரத் துடனே
பணி விடைசெயத் தானவர் வானவர்
பழ மகபதிப் பேரியல் சீரியல்
பக ரிளமுறைக் கோனென வானெறி
      --பாலிப் பவரே

கறைபட் டுள்ளது வெண்கலைத் திங்கள்
      கடம்பட் டுள்ளது கம்பத்து வேழம்
சிறைபட் டுள்ளது விண்ணெழும் புள்ளு
      திரிபட் டுள்ளது நெய்படுந் தீபம்
குறைபட் டுள்ளது கம்மியர் அம்மி
      குழைபட் டுள்ளது வல்லியங் கொம்பு
மறைபட் டுள்ளது அரும்பொருட் செய்யுள்
      வளமை ஆசூர் வடகரை நாடே.

காயக் கண்டது சூரிய காந்தி
      கலங்கக் கண்டது வெண்தயிர்க் கண்டம்
மாயக் கண்டது நாழிகை வாரம்
      மறுகக் கண்டது வான்சுழி வெள்ளம்
சாயக் கண்டது காய்குலைச் செந்நெல்
      தனிப்பக் கண்டது தாபதர் உள்ளம்
தேயக் கண்டது உரைத்திடுஞ் சந்தனம்
      சீவல மங்கைத் தென்கரை நாடே.சோதி மாமணி வீதி நெருக்கும்
      சுரும்பு பாடி இரும்பும் உருக்கும்
சாதி நால்வளம் நீதி பெருக்கும்
      தடத்து வாளை குடத்தை நெருக்கும்
போதில் மேய்ந்திள மேதி செருக்கும்
      புனமெல் லாந்தண் மலர்விண் டிருக்கும்
ஆதி நாதர் அனாதி யொருத்தர்
      அழகர் முக்கூடல் ஊரெங்கள் ஊரே.தத்தும் பாய்புனல் முத்தம் அடைக்கும்
      சாலைவாய்க் கன்னல் ஆலை யுடைக்கும்
கத்தும் பேரிகைச் சத்தம் புடைக்கும்
      கலிப்பு வேலை ஒலிப்பைத் துடைக்கும்
நித்தம் சாறயர் சித்ரம் படைக்கும்
      நிதியெல் லாந்தன் பதியிற் கிடைக்கும்
மத்தஞ் சூடும் மதோன்மத்த ரான
      மருதீசர் மருதூர் எங்கள் ஊரே.மீது யர்ந்திடுந் தெங்கிள நீரை
      மிடைந்த பூகஞ் சுமந்துதன் காயை
சூத மொன்றிச் சுமக்கக் கொடுக்குஞ் 
      சூதந் தன்கனி தூங்கும் பலாவின்
ஓதும் அந்தப் பலாக்கனி வாழை
      உளுக்க வேசுமந் தொண்குலை சாய்க்கும்
மாது ளங்கொம்பு வாழையைத் தாங்கும்
      வளமை ஆசூர் வடகரை நாடே.பங்க யந்தலை நீட்டிக் குரம்பினிற்
      பச்சை இஞ்சியின் பார்சடை தீண்டும்
தங்கும் இஞ்சியும் மஞ்சட் கழுத்தைத்
      தடவி மெள்ளத் தொடும்அந்த மஞ்சள்
அங்க சைந்திடும் காய்க்கதிர்ச் செந்நெல் 
      அளாவி நிற்குமச் செந்நெலு மப்பால்
செங்க ரும்புக்குக் கைதரும் போல்வளர்
      சீவல மங்கைத் தென்கரை நாடே.

No comments:

Post a Comment