ஆறெலாம் அடிகள்; வைத்த வடியெலாம் விழிநீர்; நின்ற
தூறெலாம் அரிவை சென்ற சுவடெலாம் குருதி தொட்ட
மாறெலாம் கூந்த றுன்று வனமெலாந் துணிகள் யார்க்கும்
தேறலாம் தகைமைத் தன்றிச் செடியெலாம் தேடிச் சென்றாள்.
ஓடினாள் உள்ளம் எல்லாம் உருகினாள் கருகி மேனி
வாடினாள் விறகு வைத்த வடத்தினுக் கருகே வந்தாள்
நாடினாள் கழுகும் பேயும் நரிகளும் குறளும் துன்றிக்
கூடிய குழவி னாப்பண் குமரனைச் சென்று கண்டாள்.
கண்டனள் கதறி வீழ்ந்தாள் கழுகெலாம் இரியல் போகக்
கொண்டதோர் மகவி னாசை ஆவியைக் கொள்ளை கொள்ள
முண்டகக் கரத்தால் ஏந்தி முருகனை மடிமேல் வைத்து
அண்டரும் மறுகி ஏங்க வாய்திறந் தரற்ற லுற்றாள்
பனியால் நனைந்து வெயிலால் உலர்ந்து
பசியால் அலைந்து முலவா
அநியாய வெங்கண் அரவால் இறந்த
அதிபாவம் என்கொல் அறியேன்
தனியே கிடந்து விடநோய் செறிந்து
தரைமீ துருண்ட மகனே
இனியாரை நம்பி உயிர்வாழ்வம் என்றன்
இறையோனும் யானும் அவமே.
நிறை யோசை பெற்ற பறையோசை யற்று
நிரையாய் நிறைந்த கழுகின்
சிறையோசை யற்ற செடியூ டிறக்க
விதியா ரிழைத்த செயலோ
மறையோ னிரக்க வளநாட னைத்தும்
வழுவா தளித்த வடிவேல்
இறையோ னளித்த மகனே உனக்கும்
இஇதுவோ விதித்த விதியே.
வானின் றிழிந்து சொரிகின்ற தாரை
மழைபோல வீழ விழிநீர்
ஊனின்றி மேனி உதிரங்கள் சிந்த
உயிரின்றி வெம்பு தழலின்
மேனின்று வெந்த தளிர்போல் மயங்கி
விதியாரை நொந்து தனியே
யானின் றிரங்க வேனென்ப தில்லை
இதுவோவு னீதி மகனே.
செங்கோ லறத்தின் முறையே செலுத்து
திறலோ னெவர்க்கு முரவோன்
வெங்கோப யானை விறன்மன்ன னம்மை
விடுவிக்க வெண்ணி வருநாள்
பங்கே ருகத்து மலர்போல் விளங்கு
வதனா மகிழ்ந்த பரிவால்
எங்கேயெ னாசை மகனென் றுரைக்கில்
எதிரேது சொல்வன் மகனே.
நீராள வாவி செறிநா டனைத்து
நிறைமாத வற்கு தவினும்
பாராளு நீர்மை தொடர்பற்ற தன்று
படியாளும் எந்தை முடியில்
காராளர் ஏர்கள் கடவோசை யோய்வில்
கன்னோசி நாட தனைமேல்
ஆராள வல்லர் அவமே வனத்தில்
அரவால் இறந்த மகனே
நல்லோர் வகுத்த முறையாம் அறங்கள்
நாலெட்டில் ஒன்று குறையேம்;
இல்லோரை அற்பம் இகழோம்; இறுக்கும்
இறையன்றி ஏற உகவேம்;
சொல்லோ மறுத்தும் உரையோம்; உரைத்த
துறவோர்கள் புத்தி கடவேம்;
எல்லோர் தமக்கும் இனிதே விளைப்பம்;
ஏதாக வந்தது இதுவே?
மறைநீதி யுற்ற புறநா டழித்து
வருசேனை யாள்வ தறியேம்
மறைநீதி முற்றும் உணரா வமைச்சை
அணிவாயில் வைத்து மறியேம்
குறையை இழைத்து வினையே விளைத்த
குடிவைத் திருந்து மறியேம்
இறையே தவத்தின் விளைவே எமக்கும்
இதுவோ விதித்த விதியே.
கனமுந் தருக்கள் குலமுந் தரித்த
கரமும்; பெருத்த உரமும்;
தினமுஞ் சிறக்கும் முகமும்; தரித்த
சிகையும்; கிடக்கும் முறைகண்டு
இனமுந் தரித்தது உயிரான பாவி
இறவாம லென்றன் மகனே!!
மனமுந் தரிப்ப திலைநொந்து பெற்ற
வயிறுந் தரிப்ப திலையே.
பரவாதி கட்கு மிகவே விளைத்த
படிபோல்; உளத்தில் அறமே
விரவாத துட்ட முனிகௌசி கற்கு
வினையேம் இழைத்த குறைபோல்;
கரவே பிடித்து வறியே னளித்த
களிறாவி செற்ற கடுவாய்
அரசே உனக்கு முளதோ பகைக்க
வளியேன் இழைத்த வினையே.
என்னாய கன்றன் மணிமார்பி லேறி
விளையாடு கின்ற வெழிலோய்
முன்னாய் விளைந்த கனன்மூழ்க வெம்மின்
முதலே நடந்த மதலாய்
செந்நாய் திரண்டு செறிகா னிருந்து
தெளியா திரங்கு மெனைநீ
அன்னாய் வருந்த லையெனாத துன்ற
னறிவிக் கடாது மகனே.
மறவா ளெயிற்று மணிமா சுணத்தின்
வலியா லிறந்து ளவெனோ
டிறவா திருக்கு மதிபாவி தன்னொ
டுறவே தெனக் கருதியோ
திறவாய் சிவந்த கனிவா யுரைத்தல்
செய்கிலாய் முகத்து விழியாய்
பிறவாத நித்த னடியே விழுத்து
பெருமான் அளித்த மகனே.
வடியேறு வெற்றி நெடுவேன் மலர்க்கை
மகனோ டிறந்து மடியாக்
கொடியேன் முகத்தில் விழியார் முனிக்கு
வளநா டளித்த கொடையார்
இடியே றடர்த்த மரமாகி மண்ணி
னிடையே உழைத்த லழகோ
அடியேனை யொக்க முடியா திருத்த
லநியாய மிக்க யமனே.
No comments:
Post a Comment